திருக்கயிலாய பரம்பரை மெய்கண்ட சந்தானம் திருவாவடுதுறை ஆதினத்திற்குச் சொந்தமான திருவீழிமிழலை ஸ்ரீ சுந்தரகுஜாம்பிகை சமேத ஸ்ரீ வீழிநாத சுவாமி திருக்கோயில் சித்திரைப்பெருவிழா அழைப்பிதழ்
சோபகிருது ஆண்டு பங்குனி மாதம் 29 முதல் க்ரோதி ஆண்டு சித்திரை மாதம் 9 வரை 11.04.2024 - 22.04.2024
திருக்கோயில் தலச்சிறப்பு
தேவாரத் திருப்பதிகங்களை பெற்ற காவிரித் தென்கரைத் திருத்தலங்களுள் 61-வது தலமாக விளங்குவது திருவீழிமிழலைத் திருத்தலமாகும். விஷ்ணு, பிரமன், இந்திரன் அகத்தியர், வசிஷ்ட்டர் ஆகியோர் இங்கு வழி பாடாற்றிப் பேறு பெற்றுள்ளனர். ஸ்ரீ சக்கரம் பெறுவதற்காக வந்த திருமால் ஆயிரம் தாமரை மலர் சாற்றும் வழிபாட்டில் ஒருநாள் ஒரு மலர் குறைய அதற்கு ஈடாகத் தமது கண் ஒன்றைப் பறித்துச் சாற்றி இறைவனருளால் ஸ்ரீ சக்கரம் பெற்றார். சுவேத கேதுவின் பொருட்டு காலசம்ஹாரம் செய்தருளினார்கள்.
காத்தியாயனார் என்னும் முனிவரின் அருந்தவப் புதல்வியாகத் தோன்றிக் காத்தியாயினி என்னும் திருப்பெயருடன் விளங்கிய உமாதேவியாரை இறைவன் திருமணம் செய்தருளி நித்தம் மணவாளனாக காட்சி தருகிறார். இரதி தேவிக்காக மன்மதனுக்கு உயிர் வழங்கியருளினார். சிபி, புரூரவச் சக்கரவர்த்திகள் திருப்பணி பல செய்ய அருள்புரிந்தார்.
திருஞானசம்பந்தர்க்குத் திருக்கழுமலக் காட்சியை இங்கே பெருமான் காட்டக் கண்டு தரிசித்தார். சம்பந்தரும், நாவுக்கரசரும் பசிவிரவிய பஞ்ச காலத்தில் தனித்தனி இருபெருமடங்களில் தங்கியிருந்து இறைவன் கொடுத்தருளிய படிக்காசு கொண்டு இருபொழுதும் பறைசாற்றி அடியவர்களுக்கு அறுசுவை உணவு வழங்கியருளினர். சம்பந்தர் பதினான்கும், நாவுக்கரசர் எட்டும், சுந்தரர் ஒன்றும் ஆக இருபத்து மூன்று திருப்பதிகங்கள் இத்தலத்திற்கு உள்ளன. சேந்தனார் திருவிசைப்பாவும் உண்டு. அருணகிரிநாதரும் இங்குள்ள குமரவேலைப் போற்றிப் பாடியுள்ளார்.








0 Comments